தண்ணீருக்குள் கரைந்திருக்கும் அரசியல்

நீர் மூலம்

ரிஷிமூலம், நதிமூலம் இரண்டும் கேட்கக் கூடாதென்று சொல்வார்கள். வேறு வழியில்லை நாம் இப்போது கேட்டுதான் ஆகவேண்டும். நமது பூமியை செயற்கைக்கோளிலிருந்து பார்த்தால் பூமியில் எங்கும் நீர் நிறைந்திருப்பது போலதான் தோன்றும். அது உண்மைதான். ஆனால் அது கடல் நீர், அள்ளிப்பருகினால் வாய் ஓரங்கட்டும். கடல் நீரையும் சேர்த்து நமது பூமியில் உள்ள மொத்த நீரின் அளவை விஞ்ஞானிகள் விஜயகாந்த் போல புள்ளிவிவரமாக பிரித்து மேய்ந்திருக்கிறார்கள். அந்த புள்ளிவிவரத்தை சற்று பார்க்கலாம்.

நமது பூமிப்பந்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் நீரில் 96.5 % கடல் நீர்தான். அது நமக்கு குடிக்க உதவாது. இன்னும் 1% அமில நீர். அதையும் நாம் பயன்படுத்த முடியாது. இந்த புள்ளிவிபரத்தைக் கேட்டதும் பாதிபேருக்கு புரையேறியிருக்கும். இன்னும் கேட்டால் சற்று மயக்கம் வந்தாலும் ஆச்சரியமில்லை. கடல்தண்ணீர் போக மீதியிருக்கும் 2.5% தான் நாம் பயன்பாட்டுக்குத் தகுந்த நல்ல நீர். இப்போது நாம் நல்ல நீரை மட்டும் கணக்கில் கொள்வோம். 100% நல்ல நீரில் 69% அண்டார்டிகா போன்ற பகுதிகளில் உறைந்து கிடக்கிறது, 30% நிலத்தடியில் இருக்கிறது, 1% தான் ஆறு, ஏரி, குளம், குட்டைகளில் இருக்கிறது.

இந்தப் புள்ளிவிவரங்களைக் கேட்டால் சாப்பிடப் பின் கைகழுவவே கொஞ்சம் கூச்சமாக இருக்கும். நாம் அன்றாட வாழ்வில் செலவழிக்கும் நீர் மிக அதிகம். குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில். நம் நாட்டில் நிறையபேர் தண்ணீர்க்  குழாயைத் திறந்துவிட்ட பின்புதான் பல் துலக்கவேத் தொடங்குவார்கள். தண்ணீர் இல்லாமல் இந்த பூமி வாழாது. தண்ணீருக்காகத்தான் மூன்றாம் உலகப்போரே துவங்கலாம் என்று விஞ்ஞானிகள் ஜோசியம் சொல்கிறார்கள். இந்தத் தண்ணீருக்குள் கரைந்து கிடக்கும் உலக அரசியலைப் பற்றிய ஆராய்ச்சிதான் இந்தக் கட்டுரை.

படிகத் தண்ணீர்

படிகம் (Crystal) என்றால் என்னவென்று பாடமெடுக்கப் போவதில்லை. படிகம் என்றால், கல், கண்ணாடி போன்று கெட்டியான பொருள். அவ்வளவு தெரிந்திருந்தாலே போதுமானது. நீர் பொதுவாக மூன்று நிலைகளில் இருக்குமென்று படித்திருப்போம். திரவமாக, பனிக்கட்டியாக, நீராவியாக. அவ்வளவுதான் நமக்குத் தெரிந்தது. ஆனால் சில அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு நான்காவது ஒரு நிலையில் தெரிந்தது. நீர் படிக வடிவில் பூமியில் இருக்கிறது என்பதை அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தைச் (Northwestern University) சேர்ந்த ஸ்டீவென் ஜேக்கப்சென் (Steven Jacobsen) என்பவரது தலைமையிலான குழு, பூமிக்கடியில் சுமார் 700 கிலோமீட்டர் ஆழத்தில் நீர் படிக வடிவில் உறைந்து கிடக்கிறதென்பதைக் கண்டறிந்தார்கள். இது 2014ம் ஆண்டுவாக்கில் கண்டுபிடிக்கப்பட்டது. நாம் இதுவரை பூமியைத் தோண்டிய அதிக ஆழம் 10 கிலோமீட்டர். தண்ணீர் கடல் அளவுக்கு படிக வடிவில் பூமிக்கடியில் கொட்டிக்கிடந்தாலும் அதை எடுக்கும் தொழில்நுட்பம் நம்மிடம் தற்போது இல்லை. ஒருவேளை எதிர்காலத்தில் வரலாம். ஆனால் நமது வாழ்நாளில் சாத்தியமா என்று தெரியவில்லை. ஆக தற்போதைக்கு ஆறு, குளங்களில் கிடைக்கும் தண்ணீரும், பூமிக்கு சற்று ஆழத்தில் கிடைக்கும் நிலத்தடி நீரையும் நம்பிதான் நம் வாழ்க்கை.

தண்ணீருக்குள் கண்ணாமூச்சி

படிகத் தண்ணீரை நம் வாழ்நாளில் காண்பது கடினம் என்பது உறுதி. நாம் ஏற்கனவே பார்த்தபடி, நம்மிடம் இருக்கும் 2.5% நல்லநீர் தான் நம் தலைமுறையின் நீராதாரம். அதைப் பயன்படுத்தும் முறையில்தான் நமது அடுத்தத் தலைமுறையின் வாழ்வாதாரம் இருக்கிறது. தண்ணீர்ப் பயன்பாட்டைத் துல்லியமாக அளவிட சில வழிமுறைகள் கையாளப்படுகின்றன. அவை நீர்த்தடம் (Water Footprint) மற்றும் மறைநீர் (Virtual Water). 1993ம் ஆண்டுதான் மறைநீர் என்ற வார்த்தை சந்தைக்கு வந்தது. மறைநீர் என்ற வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தியவர் இங்கிலாந்தைச் சேர்ந்த டோனி ஆலன் (Tony Allan).  2002ம் ஆண்டு அர்ஜென் Y ஹொயெக்ஸ்ட்ரா (Arjen Y. Hoekstra) என்பவர் நீர்த்தடம் என்ற வார்த்தையை  அறிமுகப்படுத்தினார். இந்த இரண்டு வார்த்தைகளும் நீர் மேலாண்மையில் ஏற்படுத்திய மாற்றங்கள் ஏராளம்.

சமீபகாலமாக இந்தியா மற்றும் வளரும் நாடுகளில் அதிகரித்து வரும் மகிழ்வுந்து (Car) தயாரிப்பு நிறுவனங்கள், உணவுப்பொருள் ஏற்றுமதி ஆகியவற்றுக்குப் பின்னால் இருக்கும் கண்ணாமூச்சிதான் இந்த நீர்த்தடமும், மறைநீரும். கொஞ்சம் விரிவாகப் பார்த்தால் உண்மை விளங்கும். இந்த கண்ணாமூச்சியைப் பற்றிப் புரிந்துகொள்ளும் முன் மறைநீர் என்றால் என்ன? நீர்த்தடம் என்றால் என்ன?  இவற்றை எல்லாம் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அண்மைக்கால வலைப்பதிவுகள்
தொடர்புடைய வலைப்பதிவுகள்
Index