எண்ணென்ப ஏனை எழுத்தென்ப – மூன்று

மூன்றாம் இடம்

நம் பூவுலகில் மூன்றாம் இடத்தைத் தவிர சிறப்பான இடமொன்று  இருக்குமா என்பது சந்தேகமே. ஏனென்றால், சூரியக்குடும்பத்தில் நமது பூமியே மூன்றாவது இடத்தில்தான் இருக்கிறது. ஆகையால் மூன்றாம் இடம் என்பது பூமியின் இடத்தைக் குறிக்கும். விளையாட்டிலோ, படிப்பிலோ மூன்றாம் இடம் கிடைத்தால் பூமியை ஒரு காரணம் சொல்லி மூன்றாம் இடம் பெற்றதற்கு பெருமை தேடிக் கொள்ளலாம்.

maxresdefault

தமிழில் சிறுகவிதை முதல் பெரும் காவியம் வரை, துவக்கம் உலகை முன்னிறுத்தி அமைய வேண்டுமென்பது எழுதப்படாத விதி. அது தமிழர்களின் உலகம் தழுவிய பரந்த பார்வையைக் காட்டுகிறது. நாமும், மூன்று குறித்தத் தகவல்களைத் திரட்டும்போது, உலகை முன்னிறுத்தித்  துவங்குவது சிறப்பு. அந்த சிறப்புடன் மூன்று தொடர்பான தகவல்களுக்குள் நுழைவோம்.

மூன்று – ௩

தமிழ் எண் மூன்று, கிட்டத்தட்ட உயிர் மெய்யெழுத்து “ங” போல இருக்கும். கடைசியில் வரும் மேல்நோக்கிய கோட்டை நீக்கி விட்டால் அதுதான் எண் மூன்றின் குறியீடு “௩”.  “ங” மற்றும் பிற மெல்லின எழுத்துக்கள் மூக்கின் உதவியால் உச்சரிக்கப்படுவதால் மூக்கொலிகள் என்று அழைக்கப்படுகின்றன. மூக்கால் உச்சரிக்கப்படுவதாலோ என்னவோ, அந்த எழுத்தே மூக்கு போலதான் இருக்கிறது. மூக்கின் துவாரங்கள் இருக்கும் பகுதியைப் பார்த்தால் கிடப்பில் போட்ட மூன்று போலத்தான் இருக்கும்.

மூக்கிற்கும் மூன்றிற்கும் வேறு ஒரு தொடர்பு உண்டு. பிராணயாமம் என்ற மூச்சுக்கலையில் மூன்று நிலைகள் உண்டு.

  • மூச்சை உள்ளிழுத்தல் (பூரகம்)
  • மூச்சை உள்ளே நிறுத்துதல் (கும்பகம்)
  • மூச்சை வெளியிடுதல் (ரேசகம்).

திருமந்திரத்தில் மூச்சுப்பயிற்சி குறித்த பாடலில் இது குறித்து சொல்லப்பட்டிருக்கிறது.

ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பம் அறுபத்து நாலதில்
ஊறுதல் முப்பத் திரண்டதி ரேசகம்
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே.
(திருமந்திரம்)

தமிழும் மூன்றும்

தமிழுக்கும் மூன்றுக்கும் நிறைய தொடர்புண்டு. தமிழ் என்ற சொல்லே மூன்றெழுத்து கொண்டதுதான். மேலும் நாம் அறிந்தது போல தமிழ் மூன்று வகையானது.

  • இயல்
  • இசை
  • நாடகம்

தமிழில் உள்ள எழுத்துக்களின் வகை மொத்தம் மூன்று.

  • உயிரெழுத்துக்கள்
  • மெய்யெழுத்துக்கள்
  • சார்பெழுத்துக்கள்

மெய்யெழுத்துக்கள் மூன்று.

  • வல்லினம்
  • மெல்லினம்
  • இடையினம்

தொல்காப்பியம் கூறும்  இலக்கணங்கள் மூன்று.

  • எழுத்திலக்கணம்
  • சொல்லிலக்கணம்
  • பொருளிலக்கணம்

யாப்பிலக்கணப்படி எழுத்துக்களின் மாத்திரைஅளவுகள் மூன்று.

  • குறில்
  • நெடில்
  • ஒற்று

இப்படி தமிழுக்கும் மூன்றுக்கும் உள்ள தொடர்பு அளப்பரியது. கலைஞர் அடுக்கியது போல மூன்றெழுத்து சொற்கள் தமிழில் ஏராளம். அதிலும் குறிப்பாக அம்மா, அப்பா போன்ற வார்த்தைகள், ஒரு உயிரெழுத்து, ஒரு மெய்யெழுத்து, ஒரு உயிர்மெய்யெழுத்து என்று மிகுந்த கவனத்துடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவை அனைத்துக்கும் திலகம் வைத்தாற்போல, தமிழ் வளர்த்த சங்கங்களும் மூன்று என்பது ஆச்சர்யமான உண்மை.

  • முதற்சங்கம்
  • இடைச்சங்கம்
  • கடைச்சங்கம்

இந்த மூன்று சங்கங்களுமே பாண்டிய நாட்டில் உருவாக்கப்பட்டவை.

மூவேந்தர்களும் மூன்று நாடுகளும்

தமிழ் நாட்டைப்  பல மன்னர்கள் ஆண்டாலும் சேர, சோழ, பாண்டியர்கள் ஆகிய மூவேந்தர்கள்தான் முதன்மையானவர்கள். தமிழ்நாடு, பல சிற்றரசுகளாக சிதறுண்டு கிடந்தாலும், மூவேந்தர்கள் ஆண்ட, சேர, சோழ, பாண்டிய நாடுகள்தான் வரலாற்று சிறப்பு வாய்ந்தவை. மூவேந்தர்களுள் மூத்த குடிகள் என்றால் பாண்டியர்கள்தான்.

Murali_Moovendar

சங்ககாலம் தொட்டுக் கணக்கிட்டால் பாண்டிய நாட்டுக்கு மொத்தம் மூன்று தலைநகரங்கள் உண்டு. முதல் தலைநகரம் கபாடபுரம், இரண்டாவது கொற்கை, மூன்றாவது மதுரை.  கபாடபுரம் மற்றும் கொற்கை, அடிக்கடி கடற்கோள் எனப்படும் சுனாமியால் பாதிக்கப்பட்டது. மேலும் கடல்மட்ட உயர்வால் நிலத்தையும் இழந்தது. ஆதலால், கடலே இல்லாத ஊரில்தான் இனி தலைநகரை அமைக்க வேண்டுமென்று பாண்டியர்கள் முடிவெடுத்து மதுரையைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பது வரலாறு. குமரிக்கண்டத்தில் மதுரை என்ற ஊர் இருந்ததாகவும், அதுதான் பாண்டியர்களின் முதல் தலைநகரம் என்று வாதிடுவோரும் உண்டு, ஆனால் அது இன்னும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. மூன்றுக்கும் தமிழுக்கும் மட்டுமல்ல, தமிழ்மண்ணுக்குமே நிறைய தொடர்பு உண்டு.

தமிழ்நாட்டுக்கு வந்த பாதிப்பு கூட மூன்றின் வடிவில்தான் வந்தது. தமிழ்நாடு, தமிழரைத் தவிர வேற்று மொழிக்காரர்கள் கையில் முதலில் சிக்கியது மூன்றாம் நூற்றாண்டில்தான். களப்பிரர்கள்தான் தமிழகத்தைக் கைப்பற்றிய முதல் வேற்று மொழிக்காரர்கள். களப்பிரர்கள் தமிழகம் முழுவதையும் மூன்று நூற்றாண்டுகள் ஆண்டார்கள். கி.பி. 575ல் முதலில் களப்பிரர்களை வென்று ஆட்சியைக் கைப்பற்றியது கடுங்கோன் பாண்டியன் என்று பாண்டிய மன்னன்தான்.

திரிகடுகம்

தமிழில் மூன்று என்ற எண்ணுக்கும் முக்கடுகம் அல்லது திரிகடுகம் என்ற நூலுக்கும் உள்ள தொடர்பு அதன் பெயரிலேயே புரியக்கூடியது. மூன்றைப் பற்றிய தகவல்களைத் தொகுக்கும்போது மறக்க முடியாத நூல்களில் ஒன்று திரிகடுகம். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான திரிகடுகம், நல்லாதனார் என்ற புலவரால் பாடப்பட்டது. மொத்தம் 101 பாடல்கள். சிறப்பு என்னவென்றால், ஒவ்வொரு பாடலும் மூன்று கருத்துக்களை சொல்லும். இதன் ஒவ்வொரு பாடலிலும் “இம்மூவர்” அல்லது “இம்மூன்றும்” என்ற சொல் குறிப்பிடப்பட்டுள்ளது. திரிகடுகம் என்ற சொல் சுக்கு, மிளகு, திப்பிலியைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி சித்த மருத்துவத்தில் தலைசிறந்த நோய் தீர்க்கும் மருந்து. அந்த மருந்தைப் போல நம் மனதில் உள்ள நோயை நீக்கும் நூல் என்ற பொருளில் இந்த நூலுக்கு திரிகடுகம் என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

thirukadugam

திரி என்றால் மூன்று, கடுகம் என்றால் காரம். சுக்கு, மிளகு, திப்பிலியில் உள்ள காரம் போல திரிகடுகப் பாடல்களும் சற்று காரமாகவே இருக்கும். உதாரணமாக, எனது ரத்தத்திலும், சித்தத்திலும் ஊறிப்போய்க்கிடக்கும் ஆரிய எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கும் ஒரு திரிகடுகப் பாடல்.

ஊனுண் டுயிர்கட் கருளுடையேம் என்பானும்
தானுடன்பா டின்றி வினையாக்கும் மென்பானும்
காமுறு வேள்வியில் கொல்வானும் இம்மூவர்
தாமறிவர் தாங்கண்ட வாறு.” (திரிகடுகம் – 36) 

இந்தப்பாடலில் நல்லாதனார், மூன்று பேருக்கு அறிவில்லை என்று பதிவு செய்கிறார். உயிரைக் கொன்று தின்று, அதாவது அசைவம் சாப்பிட்டுவிட்டு அதன் பின்னும் நான் இரக்கமானவன் என்று சொல்பவன் முதல் ஆள். சுயமாக முயற்சி செய்யாமல், விதியை நம்பி சோம்பேறியாய்த் திரிபவன் இரண்டாவது ஆள். மூன்றாவதாக யாகம் என்ற பெயரில் வேள்வித்தீயில் உயிர்களைக் கொல்பவன். நுணுகி ஆராய்ந்தால், அன்று உயிர்களைக் கொன்று தின்பதையே ஒரு தொழிலாக வைத்திருந்தவர்கள், விதியை நம்பி மதியின்று திரிந்தவர்கள், வேள்வி வளர்த்து உயிரைக் கொன்றவர்கள், இவை அனைத்துமே ஒரு இனத்துக்குப் பொருந்துமென்றால் அது ஆரிய இனம் மட்டுமே. அந்த வகையில் ஆரிய எதிர்ப்பை ஆழமாகப் பதிவு செய்யும் பாடல் இது.

முக்கனிகள்

முக்கனிகள் என்றாலே நம் மனதுக்குள் வருவது மா, பலா, வாழைதான். மூன்று பழங்களுமே பல்வேறு சிறப்புகள் வாய்ந்தவை. ஆனால் சங்ககாலத்திலிருந்தே தமிழகத்தில் முக்கனிகள் என்பது மா, பலா, வாழையைத்தான் குறித்ததா என்பது ஆய்வுக்குரியது. ஏனென்றால், சீவகசிந்தாமணியில் ஒரு பாடலில், முப்பழம் என்ற வார்த்தைப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் முப்பழங்கள் என்றால், கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

விலக்கில் சாலை யாவர்க்கும் வெப்பின் முப்பழச்சுனை
தலைத்தணீர் மலரணிந்து சந்தனம் செய் பந்தரும்
கொலைத்தலைய வேற்கணார் கூத்தும் அன்றி ஐம்பொறி
நிலத்தலைய துப்பெலா நிறைது ளும்பும் ஊர்களே.” (சீவக சிந்தாமணி)

podi_17310

முப்பழம் என்பது கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காயைக் குறித்திருக்கலாம் என்பதற்கு சாட்சியாக இன்றும் நாம் ஒரு சொல்லைப் பயன்படுத்துகிறோம், அது திரிபலா. திரிபலா என்று நாட்டு மருந்துக்கடைகளில் கேட்டுப்பாருங்கள், கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் மூன்றும் சம அளவில் கலக்கப்பட்ட நாட்டுமருந்து கிடைக்கும். திரி என்ற வடமொழி சொல்லுக்கு மூன்று என்று அர்த்தம். பழம் என்ற சொல் பலா என்று திரிந்து விட்டது. முப்பழம் என்ற சொல்தான், வடநாட்டு சொல் கலந்து, திரிப்பழம் என்று திரிந்து, காலப்போக்கில் “திரிபலா” என்று மருவி விட்டது. ஆகையால் முப்பழம் அல்லது முக்கனிகள் என்பது சங்ககாலத்தில் கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காயைக் குறித்திருக்கலாம் என்று கருத வாய்ப்புள்ளது.

மூன்றடி நிலம்

மூன்றடி நிலம் கேட்டு, மாவலி அரசனின் தலையில், வாமனன் ஒருவன் கால் வைத்ததாக ஒரு புனைக்கதை உண்டு. உண்மையில் மாவலி, மாபெரும் வலிமை பெற்ற அரசன். அவரைப் போரிட்டு வெல்வது கடினம். ஆனால் கொடை என்று வந்துவிட்டால், மாவலி கர்ணனுக்கு அண்ணன். மாவலியுடன் போரிட்டு வெல்ல முடியாத ஆரியக்கூட்டம் செய்த சதிதான் இந்த புனைக்கதை. அவன் அளித்த பிச்சை நிலத்தில் வாழ்ந்து கொண்டு, அவன் தலையில் கால் வைத்ததாகக் கதையும் சொன்னார்கள். நமது முப்பாட்டன் மாவலியைப் பற்றி வந்தேறி ஆரியன் சொன்னக் கதையை நாம் இன்றும் வெட்கமில்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

1510008_1397722160520298_3168316405607299061_n

மாவலியைப் போரிட்டு வெல்ல முடியாதென்று அறிந்த ஆரியக்கூட்டம் ஒன்று, அவன் தானதர்மங்களைப் பற்றிக் கேள்விப்பட்டு அவனிடம் பிச்சைக் கேட்க வந்தது. அந்தக் கூட்டத்தின் தலைவன் பெயர் வாமனன். ஆரியக் கூட்டத்தின் சதிகளை ஏற்கனவே அறிந்திருந்த மாவலியின் அமைச்சர் சுக்கிரன், அவர்களுக்கு தானம் ஏதும் அளிக்க வேண்டாமென்று எவ்வளவோ தடுத்துப் பார்த்தார். தனக்கு மிஞ்சியது போகதான் தானம் என்பதை மாவலி மறந்தார், ஆரிய சதிக்கு பலியாகித் தலைநகரை இழந்தார். இது வரலாறு, இப்போது வரலாறு திரிக்கப்பட்டு, பிச்சை கேட்டுத் தலைநகரைப் பெற்ற வாமனன், மாவலி தலையில் கால்வைத்தான் என்று பொய்யாகப் பரப்பப்படுகிறது.  ஆனால் இந்தக் கதையின் மூலம் ஆரியர்கள் மறைமுகமாக ஒரு உண்மையை ஒப்புக்கொண்டார்கள். பாவம் பார்த்துப் பிச்சை போட்டாலும், பிச்சை போட்டவன் தலையில் ஏறி மிதிப்பது ஆரியர்கள் குணம் என்ற உண்மையை அவர்களே ஒத்துக்கொண்டது மகிழ்ச்சி.

மாவலி குறித்த செய்தி மணிமேகலையில் இருக்கிறது. சோழ நாட்டை ஆண்ட அரசன் நெடுமுடிக் கிள்ளி என்பவனின் மனைவி, மாவலி சக்கரவர்த்தி வம்சத்தில் வந்தவள் என்று பதிவு செய்கிறது அந்தப் பாடல்.

நெடியோன் குறளுரு வாகி நிமிர்ந்து தன்
அடியிற் படியை அடக்கிய வந்தாள்
நீரிற் பெய்த மூரிவார்சிலை
மாவலி மருமான் சீர்கெழு திருமகள்
சீர்த்தி யென்னுந் திருத்தகு தேவியொடு” (மணிமேகலை 19. 51 – 116) 

மாவலி குறித்த தகவல் திருக்குறளிலும் உண்டு. திருக்குறளில் மடியின்மை என்ற அதிகாரத்தில் 610ம் குறள், மாவலியிடம் ஆரியர்கள் தானம் வாங்கியதைக் கண்டிப்பதாகக் கருதுகிறேன். சோம்பல் இல்லாத மன்னவன் அடியளந்தவனை விட அதிகம் பெறலாம் என்கிறது அந்தக் குறள். உழைக்காமல், சோம்பேறித்தனமாக பிச்சை கேட்டு ஒரு நாட்டை வாமனன் பெற்றது போல அல்லாமல், சோம்பல் முறித்து, உழைத்து நாட்டைப் பெற வேண்டுமென்பதுதான் மறைமுக செய்தி. இந்தக் குறளை வாமனனுக்கு எதிரானக் கண்டனக் குரலாகவே நான் பார்க்கிறேன். 

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு” (குறள்: 610)

மூன்றாவது கண்ணும், மூன்று கோடுகளும்

இல்லாத ஒன்றைத் தேடுவதில்தான் ஆன்மீகத்தின் ஆணிவேரே ஊன்றப்பட்டிருக்கிறது. உலகில் கடவுளைத் தேடுவதுபோல நமது உடலுக்குள்ளும் இல்லாத ஒன்றை காலம்காலமாக ஆன்மீக உலகம் தேடிக் கொண்டிருக்கிறது, அதுதான் நெற்றிக்கண் என்று சொல்லப்படும் மூன்றாவது கண். புருவ மத்தியில் ஒரு சூட்சுமக் கண் இருக்கிறதென்றும், அது தவத்தின் பலனாகக் காணக்கிடைக்கும் என்றும் சொல்கிறது ஆன்மீக உலகம். புருவ மத்தியில் மூன்றாவது கண் இருக்கிறதோ இல்லையோ, அதற்கு நேர் உள்ளேதான் பிட்யூட்டரி சுரப்பி உள்ளது. நமது உடலுக்குத் தேவையான பல நொதிகளை (Enzymes) சுரப்பது பிட்யூட்டரிதான். அறிவியல் பூர்வமாகவும் புருவமத்தி என்பது பிட்யூட்டரி வாயிலாக முதன்மைத்துவம் பெறுகிறது.

1239817_10200494036381317_1603406263_n

பொதுவாக, வசியம் செய்தல், நோக்கு வர்மம் போன்ற சித்து வேலைகள் எல்லாம் புருவமத்தி மூலமாகத்தான் செய்யப்படுகிறது என்பது பரவலான நம்பிக்கை. அதனால்தான் திலகமிடுவது, திருநீறு பூசுவது எல்லாமே புருவமத்தியில் பூசுகிறார்கள். புருவமத்தியை திருநீறு பூசி மறைத்து விட்டால் வசியம் செய்ய முடியாது என்பது நம்பிக்கை. அந்த நம்பிக்கைகள் ஒருபுறம் இருக்கட்டும். இந்த திருநீறு, நாமம் இவற்றுக்கும் மூன்றுக்கும் தொடர்பு உண்டு. திருநீறு, நாமம் எல்லாமே மூன்று கோடுகள்தான். ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை எரித்ததன் அடையாளம்தான் திருநீறு அல்லது நாமம் என்கிறது ஆன்மீகம். எது எப்படியோ, எல்லாவற்றையும் மூன்றோடு தொடர்புபடுத்தி வைத்திருக்கிறார்கள், அதனால் நாமும் நம் கட்டுரையோடு தொடர்புபடுத்த வேண்டியதாயிற்று.

திருக்குறளும் மூன்றும்

திருக்குறள் மூன்று பாலாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது, அந்த வகையில் திருக்குறளுக்கும் மூன்றுக்கும் தொடர்பு உண்டு.

  • அறத்துப்பால்
  • பொருட்பால்
  • காமத்துப்பால்

மேலும், திருக்குறளில் மூன்று தொடர்பான குறள்கள் நிறைய உண்டு. ஆனாலும் குறிப்பாக ஒரு குறள், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களின் மருத்துவ அறிவை உலகுக்கு உணர்த்தும்.

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.(குறள்: 941)

இந்தக் குறளில் சொல்லப்பட்டது வாதம், பித்தம், சிலேத்துமம் என்ற மூன்று. புரியும்படி சொல்வதானால் வளி அல்லது வாதம் என்றால் காற்று,  பித்தம் என்றால் சூடு, சிலேத்துமம் என்றால் குளிர்ச்சி. நம் உடலில் இந்த மூன்றில் ஏதேனும் ஒன்று கூடினாலும், குறைந்தாலும் உடலில் நோய் உண்டாகும். இந்த நூற்றாண்டில் நம் மருத்துவ உலகம் கண்டறிந்த உண்மையை, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகுக்கு சொன்னவர் நமது முப்பாட்டன் வள்ளுவன்.

முக்காலமும் தமிழும்

காலம் என்பதே ஒரு இடைவெளிதான். பெருவெடிப்பு (Bigbang) மூலம் இந்த பிரபஞ்சம் தோன்றிய முதல் நொடிதான் காலத்தின் துவக்கம் எனலாம். அன்று துவங்கிய காலம் இன்று வரை நிற்கவில்லை. இடத்தைப் பொருத்துக் காலம் மாறுபடும் என்கிறார் ஐன்ஸ்டீன். காதலியுடன் தொலைபேசியில் பேசினால் மூன்று மணி நேரம், மூன்று வினாடிகள் போல இருக்கும். ஆனால் காதலியின் அப்பாவிடம் பேசினால் மூன்று நிமிடம் மூன்று மணி நேரம் போலத் தோன்றும். ஒருவேளை ஐன்ஸ்டீன் இதைத்தான் கண்டுபிடித்தாரோ என்னவோ? ஐன்ஸ்டீனை அநாவசியமாக வம்பிழுக்காமல் நாம் மீண்டும் கால வட்டத்துக்குள் நுழைவோம். நாம் நிகழ்காலத்தைத் தவிர வேறு எந்த காலத்திலும் வாழ முடியாது என்றாலும், காலங்கள் மொத்தம் மூன்று.

  • இறந்தகாலம்
  • நிகழ்காலம்
  • வருங்காலம்

காலத்துக்கும் தமிழுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. தமிழில் ஐந்திணை குறித்த பாடல்கள் பாடுவதற்கு சில இலக்கணங்கள் உண்டு. அது ஐந்திணை அகப்பொருள் இலக்கணம் என்று அழைக்கப்படுகிறது. ஐந்திணை அகப்பொருள் இலக்கணங்கள் மொத்தம் மூன்று.

  • முதற்பொருள்
  • கருப்பொருள்
  • உரிப்பொருள்

இவற்றில் முதற்பொருள் என்றால் நிலமும், பொழுதும். பொழுது என்றால் காலம். நிலத்தையும், காலத்தையும் முதற்பொருளாக வைத்ததில் இருந்தே தமிழர்கள் காலத்திற்கு எவ்வளவு முதன்மைத்துவம் அளித்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ளலாம். பெரு வெடிப்பின் விளைவாகத் தோன்றியவற்றில் முதன்மையானது இரண்டு. ஒன்று நிலம், மற்றொன்று காலம். அவைதான் தமிழ் இலக்கணத்தில் முதற்பொருள்.

வினைத்தொகை

இந்தப் பெயரைக் கேட்டவுடன் நாம் ஏதோ தமிழ் இலக்கண வகுப்பிற்குள் நுழைந்து விட்டோமென்று பதற வேண்டாம். வினைத்தொகைக்கும் காலத்துக்கும் தொடர்புண்டு, அதைக்குறித்து மட்டும் சிறு கண்ணோட்டம். பொதுவாக வினைத்தொகையில் இரண்டு சொற்கள் இருக்கும். முதற்சொல் வினைச் சொல்லாக இருக்கும், இரண்டாவது சொல் பெயர்ச்சொல்லாக இருக்கும். வினைத்தொகையின் மற்றொரு சிறப்பு, அதன் சொற்களுக்கிடையே மூன்று காலமும் மறைந்திருக்கும். சில எடுத்துக்காட்டுகள்.

குடிநீர் – குடித்த நீர் (இறந்த காலம்), குடிக்கிற நீர் (நிகழ்காலம்) , குடிக்கும்  நீர் (எதிர்காலம்)

படர்கொடி – படர்ந்த கொடி (இறந்த காலம்) , படர்கின்ற கொடி (நிகழ்காலம்), படரும் கொடி (எதிர்காலம்)

ஊறுகாய் – ஊறிய காய் (இறந்த காலம்) , ஊறுகின்ற காய் (நிகழ்காலம்), ஊறும் காய் (எதிர்காலம்)

மேலும் சில எடுக்காட்டுகள்.

  • வீசுதென்றல்
  • கடிநாய்
  • சுடுசோறு
  • ஏவுகணை
  • ஓடுதளம்
  • ஆடுகளம்

தமிழைத் தவிர வேறு எந்த மொழியிலும் முக்காலம் உணர்த்தும் சொற்கள் உண்டா என்று தெரியவில்லை. முக்காலமும் உணர்த்தும் வினைத்தொகை தமிழின் சிறப்பு என்பதில் சந்தேகமில்லை.

மூன்று முடிச்சு

திருமணத்தில் தாலி கட்டும்போது மூன்று முடிச்சு போடப்படுகிறது. அந்த மூன்று முடிச்சுக்கு விளக்கம் தேடினால் குறைந்தது முந்நூறு விளக்கமானது கிடைக்குமென்று நினைக்கிறேன். அக்னி சாட்சி, ஊர் சாட்சி, மனசாட்சிதான் மூன்று முடிச்சின் அர்த்தம் என்று ஒரு விளக்கம், இன்னும் பல விளக்கங்கள் கிடைக்கும். சரியான  விளக்கம் என்னவென்றால், எண்ணம், சொல், செயல் என்ற மூன்றையும் குறிப்பதுதான் மூன்று முடிச்சு. கணவன், மனைவி இருவரும், எண்ணம், சொல், செயல் மூன்றுமே ஒன்றுபட்டு வாழவேண்டுமென்று வலியுறுத்துவதற்காக அல்ல. கணவன், மனைவி இருவரும் எண்ணம், சொல், செயல் மூன்றும்  ஒன்றுபட வாழ்வது என்பது இயலாத செயல், ஆனால் அந்த மூன்றிலும் வேறுபாடுகள் இருப்பினும், அவற்றை ஏற்றுக்கொண்டு, வேறுபாடுகள் இருப்பது இயற்கை என்று அறிந்து ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று வலியுறுத்தவே மூன்று முடிச்சு.

impadai_thaali

தாலியைப் பொருத்தவரை, இன்னொரு முதன்மையான செய்தி என்னவென்றால், சங்ககாலத்தில் பெண்கள் ஒருபோதும் தாலி அணிந்ததில்லை. அது மிக அண்மைக்காலத்தில் பெண்கள் கழுத்தில் திணிக்கப்பட்டது, அதாவது நாம் ஆரிய மரபுகளைப் பின்பற்றத் தொடங்கிய பின்பு. சங்ககாலத்தில் தாலி என்பது ஆண்கள் அணியும் ஒரு அணிகலன். சிறுவர்கள் போர்ப்பயிற்சி துவங்குகிறபோது, சங்கு, சக்கரம், வாள், வில், தண்டு என்ற ஐந்து போர்க்கருவிகள் உருவங்கள் பதித்த தாலி ஒன்றை அணிவிப்பார்கள். அதற்கு ஐம்படைத்தாலி என்று பெயர். போர்ப்பயிற்சிகள் நிறைவுற்று, ஐம்படைத்தாலி அகற்றிய பின்னர்தான் ஆண் போர்க்களம் செல்வான். ஐம்படைத்தாலி குறித்த பாடல்கள், புறநானூறு, அகநானூறு, மணிமேகலை போன்ற நூல்களில் காணப்படுகின்றன. உதாரணமாக புறநானூறு 77ம் பாடல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஏழாவது வரியில் தாலி என்ற சொல் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஐம்படைத்தாலியைக் குறிக்கும்.

கிண்கிணி களைந்த கால் ஓண் கழல்தொட்டுக்,
குடுமி களைந்த நுதல்வேம்பின் ஒண்தளிர்
நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து,
குறுந்தொடி கழித்தகைச் சாபம் பற்றி,
நெடுந்தேர்க் கொடிஞ்சி பொலிய நின்றோன்
யார்கொல்? வாழ்க, அவன் கண்ணி! தார்பூண்டு,
தாலி களைந்தன்றும் இலனே; பால்விட்டு
உடன்றுமேல் வந்த வம்ப மள்ளரை
அழுந்தபற்றி, அகல்விசும்பு ஆர்ப்புஎழக்
மகிழ்ந்தன்றும்,இகழ்ந்தன்றும்,அதனினும் இலனே.” (புறநானூறு: 77)

சைவமும் சித்தர்களும்

சிவனை வழிபடும் சைவத்துக்கும் மூன்றுக்கும் தத்துவத்தின் வாயிலாக தொடர்புண்டு. சைவம் முப்பொருள் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. பதி, பசு, பாசம் என்பதுதான் அந்த முப்பொருள். முப்பொருள் தத்துவத்தை அளித்தவர் திருமூலர்.

பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில்
பதியினைப் போல் பசு பாசம் அனாதி
பதியினைச் சென்று அணுகாப் பசு பாசம்
பதி அணுகில் பசு பாசம் நில்லாவே”            (திருமந்திரம்)

பதி என்றால் சிவன். பசு என்றால் ஆன்மா. பாசம் என்றால் உலகியல் இன்பங்கள். உலகியல் இன்பங்களைத் துறந்தால் ஆன்மா, சிவனை அடையும் என்பது சைவத்தின் முப்பொருள் தத்துவம். சைவத்தை வளர்த்தவர்கள் சித்தர்கள். சித்தர்களுக்கும் மூன்று தத்துவங்கள் உண்டு. மணி, மந்திரம், மருந்து.

மணி என்றால் ஆன்மா. மந்திரம் என்றால் ஓம் எனும் சொல். உண்மையில் ஓம் என்பது ஈரெழுத்து சொல்லில்லை, மூன்றெழுத்து சொல். உ, அ, ம் என்ற மூன்றெழுத்து சேர்ந்ததுதான் ஓம் என்னும் மந்திரம். பிறப்பையும் இறப்பையும் இணைக்கும் மந்திரம் ஓம். ஒரு குழந்தை பிறந்தவுடன் அழும்போது வரும் சொல் அல்லது ஓசை “உ”, “அ”. ஒரு ,மனிதன் இறக்கும்போது கடைசியாக எழுப்பும் ஓசை “ம்”. மேலும், வாயின் உதவியின்றி நம்மால் உச்சரிக்க முடிந்த ஒரே சொல் “ம்” மட்டும்தான். இந்த இரண்டையும் இணைத்தால் உ, அ, ம் என்ற எழுத்துக்கள் கிடைக்கும். உயிரெழுத்துக்களில் “ஐ” என்பது அகரமும், இகரமும் இணைவதால் கிடைப்பது. அதேபோல, அகரமும், உகரமும் இணைந்தால் பிறப்பது ஒகரம். ஆகையால் உ, அ, ம் என்பது ஓம் என்று மருவியது. இதுதான் மந்திரம். பிறப்பையும் இறப்பையும் இணைக்கும் மந்திரம். மருந்து என்பது வாசிக்கலையைக் குறிக்கும். வாசி என்பது யோகத்தின் மூலம் சிவனை உணர்வது. ஆகையால் வாசி என்பதைத் திருப்பிப் படித்தால் சிவா என்று சிவனைக் குறிக்கிறது.

சைவமும், சித்தர்களும் முப்பொருள் தத்துவத்துக்குள் அடக்கம். அதேபோல் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற தொழில்கள் சிவனின் முத்தொழிலாக கூறப்படுகிறது. சிவன் என்றால் சீவன். சீவன் என்றால் உயிர். உயிரின் தோற்றம், மறைவு குறித்த கோட்பாடுதான் முத்தொழில். மேலும் சிவன் கையில் வைத்திருக்கும் சூலமும் மூன்றின் அடையாளம்தான். அது முச்சூலம் அல்லது திரிசூலம் என்றுதான் அழைக்கப்படுகிறது.

சமயங்களும் மூன்றும்

கிறிஸ்தவர்களுக்கும் மூன்றுக்கும் இயேசுவின் மூலம் தொடர்புண்டு. இயேசு சிலுவையில் இறந்தபின் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. அதைக்குறித்து ஓஷோ ஒரு மாற்றுக்கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். இயேசு 12 வயது முதல் 30 வயது வரை இந்தியா வந்து யோகாசனம் கற்றுக்கொண்டார் என்றும், சிலுவையில் அறையப்பட்டபோது யோகாசனம் மூலம் உயிரைத் தக்கவைத்துக் கொண்டார் என்றும் ஓஷோ சொல்லுவார்.  எது உண்மை என்பதை நாம் இயேசுவிடமே விட்டுவிடலாம். நமது கட்டுரைக்குத் தேவை மூன்று தொடர்பான தகவல்.

மூன்று, கிறிஸ்தவத்தை மட்டுமல்ல, இஸ்லாம் மதத்தையும் இணைக்கிறது. பொதுவாக இஸ்லாம் பண்டிகைகள்  மூன்றாம் பிறையை ஒட்டிதான் கொண்டாடப்படும். சிவன் தலையில் சூடியிருப்பதும் மூன்றாம் பிறைதான். மூன்றாம் பிறை பல மதங்களுக்கு சிறப்பான நாள். மூன்றாம் பிறைக்கு அப்படி என்ன சிறப்பு? மின் விளக்குகள் இல்லாத காலங்களில் நிலவுதான் இரவுக்கு விளக்கு. ஆனால் அமாவாசை அன்று நிலவொளி தென்படாது. அமாவாசைக்கு மறுநாளும் நிலவொளி வெளிச்சம் தராது. மூன்றாம் நாள்தான் நிலவின் ஒளி பரவலாகத் தென்படும். ஆகையால் மூன்றாம் பிறை என்பது சிறப்பு.

முப்பரிமாணம்

முப்பரிமாணம் என்றால், ஒரு பொருளை அளக்க உதவும் நீளம், அகலம், உயரம் என்ற மூன்று அளவுகளைக் குறிக்கும். மொத்தம் மூன்று பரிமாணங்கள்தான் என்பது சிலருடைய வாதம், இல்லை காலம்தான் நான்காவது பரிமாணம் என்பது மேலும் பலருடைய வாதம். மனித அறிவுக்கு எட்டாத பல பரிமாணங்கள் இருக்கலாம். ஆனால், இப்போதைய அறிவியல் வளர்ச்சியில் நாம் பார்த்து உணர்வது மூன்று பரிமாணங்கள்தான்.

warmhole

முப்பரிமாணத்தைக் கடந்த வெளியை (Space), அதிக வெளி (Hyper Space) என்கிறார்கள். முப்பரிமாணத்தைக் கடந்து புழுத்துளை (Worm Hole) மூலம் வேறொரு அண்டத்திற்கு (Universe) கடந்து செல்ல முடியுமா என்றெல்லாம் ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. அறிவியல் உலகம் எல்லாவற்றையும் கண்டுபிடித்த பின், அதை வேடிக்கை பார்ப்பது மட்டும்தான் நமது வேலை. ஆகையால் இப்போது ஒதுங்கிக் கொள்வோம்.

மூன்று குரங்குகள்

மூன்று குரங்கு பொம்மைகளைக் கண்டவுடன் நமக்கு காந்தி நினைவுக்கு வருவார். அந்தக் குரங்குகள் காந்தியின் மூலம்தான் விளம்பரம் தேடிக்கொண்டன. காந்திக்குப் பிடித்த அந்த மூன்று குரங்கு பொம்மைகளில் முதல்  குரங்கு காதைப் பொத்திக் கொண்டிருக்கும், இரண்டாவது வாயை மூடிக்கொண்டிருக்கும், மூன்றாவது கண்ணை மூடிக்கொண்டிருக்கும் இதன் மூலம் காந்தி சொல்ல வந்த கருத்து, தீயவற்றைப் கேட்காதே, தீயவற்றைப் பார்க்காதே, தீயவற்றைப் பேசாதே. ஐம்புலன்களில் மூன்றைக் கட்டுப்படுத்தினால் ஆறாவது புலனாகிய மனம் கட்டுக்குள் வந்துவிடும் என்று காந்தி நம்பினாரோ என்னவோ?

1280px-Three_Wise_Monkeys,Tosho-gu_Shrine

அந்த மூன்று குரங்குகளுக்கும் பெயர்கள் உண்டு. காதைப் பொத்திக் கொண்டிருக்கும் குரங்கின் பெயர் கிக்கசாரு (Kikazaru), வாயை மூடிக்கொண்டிருக்கும் குரங்கின் பெயர் இவாசாரு (Iwazaru), கண்ணை மூடிக்கொண்டிருக்கும் குரங்கின் பெயர் மிசாரு (Mizaru). இந்த குரங்குகளின் உருவச்சிலைகள் முதலில் செதுக்கப்பட்டது ஜப்பானில் நிக்கோ (Nikkō) நகரிலுள்ள டோஷோ-கு (Tōshō-gū) என்ற கோயிலில். அதனை செதுக்கியவர் ஹிடாரி ஜிங்கோரோ (Hidari Jingoro) என்ற முரட்டுப் பெயருக்கு சொந்தக்காரர். ஹிடாரி, காந்திக்கு சொந்தக்காரரா என்று தெரியவில்லை, ஆனால் அந்த குரங்குகளை உலகுக்குக் கொண்டுவந்தது காந்திதான் என்று பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப  தொடரும்………….

11 Responses

    1. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. உங்கள் வாழ்த்துக்கள் என்னை மேலும் பல தரமான கட்டுரைகளை அளித்திட ஊக்கப்படுத்துகிறது.

      1. மிக்க மகிழ்ச்சி… உங்கள் படைப்பில் அறிவுத்தெளிவு, நுட்பம் ஒளியடித்து பிரகாசிக்கிறது. தொடர்ந்து பலரும் பயன்பெறும் வகையில் பல்வேறு வடிவங்களில் உங்கள் படைப்புகளை கொண்டு செல்லுங்கள்.. (ஒலி, ஒளி வடிவிலும் முயற்சிக்கலாம்) ஏனெனில் கூறியுள்ள கருத்துகள் நிச்சயம் மக்களை சிந்திக்கச் செய்யக்கூடியதாக இருக்கும் என நான் நம்புகிறேன்.

  1. எழுத்து நடை அற்புதம்.
    Einstein ஐயும் ஏசுவையும் சாட்சிக்கு அழைக்கும் நகை ச்சுவை.
    உங்கள் பாணி என்று வகைபடுத்த வைக்கும் எழுத்து .
    சிறப்பு. நன்று .

    1. உங்கள் அங்கீகாரத்துக்கு நன்றிகள் பல. எனக்கென்று எழுத்தில் தனி நடை இருக்கிறதென்று அங்கீகரித்திருக்கிறீர்கள். மேலும் தனி நடை எதுவென்று சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள். மிக்க நன்றி. மகிழ்ச்சியோடு, நிறைய பொறுப்புணர்வும் அதிகரித்திருப்பதாக உணர்கிறேன். கட்டுரையைப் படித்துக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. குறைகள் ஏதுமிருப்பின் அதையும் சுட்டிக்காட்டவும், திருத்திக்கொள்ள முயற்சிக்கிறேன்.

  2. எண் எழுத்து வரிசையில் மற்றுமொரு சிறந்த படைப்பு.
    எண்ணிற்கும் எழுத்திற்கும் இடையே வெறுமனே இணைவு படுத்தும் பதிவாக அல்லாமல் அவைகள் நமது வாழ்வியலோடு கொண்டுள்ள இணக்கத்தை அடையாளப் படுத்தியமைக்கு நன்றியும், வாழ்த்துக்களும்.
    பூமியில் தொடங்கி யோகம், மன்னர்கள், தமிழ் மொழி, திரிகடுகம் என்று மருத்துவம் வரை விரிவாக பதிவிட்ட விதம் அருமை.
    மொத்தத்தில் பதிவின் ஒவ்வொரு பிரிவிலும் தமிழ்மொழியின் தனிச்சிறப்பே மேலோங்கி நிற்பது மகிழ்ச்சி.
    ஆரியர்கள், இயேசு, ஐன்ஸ்டீன் என்று போகிற போக்கில் அவர்களை சீண்டிவிட்டு சென்றாலும் பதிவின் சாராம்சத்தோடு அது ஒன்றியே வருகிறது.
    அதே சமயம் ஆன்மீகத்தையும் சற்று உரசி சென்றதால் இங்கு தீப்பொறிகள் பறப்பதை தவிர்க்க முடியவில்லை என்பதால் பதிவு சம்பந்தப்பட்ட சிறு விளக்கம்.
    சிவன், சித்தர்கள் என்று அழகாக விளக்கியிருப்பதோடு மூன்றாவது கண் பற்றிய கருத்தில் சற்று மாறுபடுகிறேன். பெரும்பாலான மக்களின் எண்ணம் என்னவென்றால் மூன்றாவது கண் என்பது நமது வலது, இடது கண்களைப் போலவே புருவ மத்தியில் ஒன்று உள்ளதாக கருதுவது.
    ஆனால் நவீன அறிவியல் சாதனங்களோடு அங்கு சோதித்து பார்த்தால் அப்படி ஒரு கண் இருக்கப் போவதில்லை. உண்மையும் அதுவே.
    மூன்றாவது / ஞானக்கண் என்பதன் தன்மையே முற்றிலும் வேறானது.
    அதற்கு இடம், தூரம், காலம் என்ற பாகுபாடு இல்லை. சுருக்கமாக சொல்வதென்றால்
    ஓரு கணினி அல்லது கைபேசியில் இணையத்தை தொடர்பு கொண்டு நமக்கு வேண்டிய தகவல்களைப்பெற கூகுள், பிரவ்சர் (Browser) என்ற செயலி அவசியம். அதன் மூலமே இணைத்துடனான தொடர்பு உண்டாகிறது.
    நமது பரந்து விரிந்த பிரபஞ்த்தோடு நாம் நினைத்த நேரத்தில் தொடர்பு கொண்டு் மூன்று காலங்களையும் உணர உதவும் சாதனமே ஞானக்கண்.
    ஒவ்வொரு மனிதப்பிறவிக்கும் இது சாத்தியமான ஒன்று.
    ஞானக்கண், நமது உள்ளுணர்வு என்ற பிரபஞ்சத்தோடு (ஆம்
    நமது உள்ளுணர்வே பிரபஞ்சம்)
    இணைந்து இருக்கும் போது நமது வாழ்வு பற்றிய புரிதலே அடியோடு மாறிப்போகும்.
    இங்கு மிகைப்படுத்துதல் எதுவும் இல்லாமல் அனுபவ உண்மைகளையே பதிவிடுகிறேன்.
    அது சர்வ நிச்சயமான உண்மை.
    ஆன்மீகம் என்பது தெளிந்த ஞானத்தின் மேல் பயணித்து மூலத்தை அடையும் ஒன்றே தவிர இல்லாத ஒன்றை நோக்கி பயணிப்பதல்ல என்பதை ஆணித்தரமாக பதிவிட விரும்புகிறேன்.
    மேலும் முக்காலமும் தமிழும் பதிவில் காலத்தையும் தமிழையும் ஒப்பிட்ட விதம் மிக சிறப்பு.
    மூன்று முடிச்சு, முப்பரிமாணம் என்று பலதரப்பட்ட விசயங்களை அலசியதில் பதிவிற்கென்று எடுத்துக்கொண்ட சிரத்தையும், நேர்த்தியும் தெரிகிறது.
    இன்னும் இதுபோன்ற தரமான பதிவுகளை எழுத வாழ்த்துக்கள்.
    தங்களது பதிவுகளை எதிர்நோக்கி ஆவலுடன்..
    நன்றி..

    1. கருத்துக்களுக்கு மிக்க நன்றி குமார். உங்கள் கருத்துக்கள் எனது கட்டுரையின் அடையாளம் என்று சொல்லலாம். கட்டுரையை விட உங்கள் கருத்துக்களின் செறிவு அதிகம். அந்த வகையில் மூன்றாவது கண் குறித்த உங்கள் பார்வை வியப்பை ஏற்படுத்துகிறது. புருவமத்தி என்று குறிப்பிட்ட இடமென்று ஒன்றில்லாமல், நீரில் கரைந்து விட்ட உப்பைப்போல நமக்குள் விரவிக்கிடக்கும் ஞானத்தின் வெளிப்பாடுதான் மூன்றாவது கண் என்பது போல சித்தரித்திருப்பது அருமை. மூன்றாவது கண்ணின் விளக்கம், எனது மூன்றாவது கண்ணை சற்று உரசி விட்டுச் சென்றது என்றே சொல்லலாம். வெறுமனே பாராட்டுக்கள் என்றில்லாமல், மாறுபட்டக் கருத்துகளையும் சேர்த்தே பதிவு செய்தது மகிழ்ச்சி.

  3. வணக்கம் கட்டுரை அருமை
    அதில் இலக்கணம் குறித்த பகுதியில் வினைத்தொகையை வினையாலணையும் பெயர் எனக்குறிப்பிட்டுள்ளீர்கள்

    காலம் மறைந்து முக்காலத்தையும் உணர்த்துவது

    அல்லது
    காலம் கரந்த (மறைந்த ) பெயரெச்சம்
    வினைத்தொகை
    அந்த தலைப்பு வினைத்தொகை என்று அமையின் சிறப்பு

    1. விக்டர் பாபு அவர்களுக்கு மிக்க நன்றி. தமிழ் இலக்கணத்தில் பிழை இழைத்ததற்கு மிகவும் வருந்துகிறேன். சில இணையதளங்களில் படித்து அதே கருத்தைத் தவறாக பதிவு செய்துவிட்டேன். தவறுக்கு மன்னிக்கவும். மீண்டும் இதுபோன்ற பிழைகள் நிகழாமல் கவனமாக இருக்கிறேன். தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி. சுட்டிக்காட்டியதால் திருத்திக்கொள்ள ஏதுவாக இருந்தது. தங்கள் பாராட்டுக்களுக்கு நன்றிகள் பல. நேரமிருந்தால் எனது கட்டுரைகள் பிறவற்றையும் படித்துத் தங்கள் கருத்துக்களைப் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அண்மைக்கால வலைப்பதிவுகள்
தொடர்புடைய வலைப்பதிவுகள்
Index