ஆயா முகத்தில் நீ கண்விழிக்க…
அலுவலக வாசலில் நான் இருப்பேன்…
தூக்கி உனைக்கொஞ்சிட கனவுடன் நான் வருவேன்…
தூக்கத்திற்கு இரவில் அழுது கொண்டு நீ இருப்பாய்….
உறங்கும் நேரம் மட்டும் உனை நான் ரசிக்கிறேன்…
உன்விழிகள் கலங்கும்போது கைப்பேசியில் தாலாட்டுகிறேன்…
தேம்பி அழ தாய்மடி என்றும் கிடைத்தது எனக்கு…
தாய்ப்பாலும் புட்டிப்பாலாய் மாறிப்போனது உனக்கு…
தவறி நான் விழுந்துவிட்டால் பதறிப்போய் வாரியணைப்பாள் என் அன்னை…
முதல் அடி எடுத்து நீ வைத்ததை புகைப்படத்தில் நான் பார்த்தேன் உன்னை…
வீட்டுச்சுமை வேலைக்கு தள்ளியது என்னை…
வீட்டுக்குள்ளே அந்நியமாக்கியது உன்னை…
கருவில் சுமந்த உன்னை கையில் சுமக்க நேரமில்லை…
உயிரில் கலந்த உன்னை உச்சிமுகர காலமில்லை…
அலுவலகத்தில் இருந்தாலும் ஆசை நெஞ்சம் உன்னுடன்தான்…
கணினி முகம் பார்த்தாலும் என் கண் முழுதும் உன் உருதான்…
என் கண்ணீருக்குள் கலையாத காவியம் நீ…
என் உயிருக்குள் கலந்த இன்னொரு உயிர் நீ…
நம் கடன்தீரும் நாளும் ஒருநாள் வரும்…
உனைக் கட்டியணைத்துக் கொஞ்சும் நாளும் வரும்…
காத்திரு மகளே… இந்த Corporate தாய்க்காக…
Like this:
Like Loading...
Related
Published by ராஜேஷ் லிங்கதுரை
ராஜேஷ் லிங்கதுரை என்னும் நான் பிறந்தது தூத்துக்குடிக்கு அருகில் இருக்கும் முள்ளக்காடு என்னும் கிராமம். கல்லூரியில் சேர்ந்த முதல் நாள், ஆசிரியர் உனக்கு எந்த ஊர் என்று கேட்டபோது, எனது ஊர் முள்ளக்காடு, எனது ஊருக்கு அருகிலேதான் தூத்துக்குடி இருக்கிறது என்று சொன்னேன். அவருக்கு நினைவிருக்கிறதோ இல்லையோ உடன்படித்த நண்பர்கள் அனைவரிடமும் எனது பெயர் முள்ளக்காடு என்று பதிவாகிப்போனது. எனது ஊரின் பெயர் என்னை விட்டுப் பிரிக்க முடியாதது.
பொறியாளர் பட்டம் பெற்று பின்பு வணிகவியல் மேலாண்மையும் படித்து, இரண்டுக்கும் தொடர்பில்லாத மென்பொருள் துறையில் வேலை. சாதி, மதம் போன்ற அடையாளங்கள், அரசாங்க அடையாள அட்டைகளுக்கு மட்டும்தான். வாழ்வில் சாதி, மதம் இரண்டையும் வெறுத்து ஒதுக்கி பல ஆண்டுகள் ஆகிறது. பகுத்தறிவாளன் என்ற சொல்லாடலைப் பயன்படுத்த விரும்பவில்லை. பகுத்தறிவு மனிதனாய்ப் பிறந்த எல்லோருக்கும் பொதுவானது. நான் கடவுள் மறுப்பாளன். ஆனால், இல்லாத கடவுளும், இருக்கின்ற கோவில்களும் சமூகத்துக்குத் தேவைதானா என்றால், ஆம் என்பதே எனது பதில்.
சங்க இலக்கியங்களைப் பொருத்தவரை, நிலம், பொழுது ஆகிய இரண்டும் முதற்பொருள். ஆனால், என்னைப் பொருத்தவரை, முதற்பொருள் மொத்தம் மூன்று. நிலம், பொழுது, மொழி. மொழியென்ற ஒன்று இல்லையென்றால், நாமும் விலங்குகளும் ஒன்றுதான். நம்மை மனிதன் என்று உணர வைப்பது நம் தாய்மொழிதான். ஆகவே, தாய்மொழி தாயினும் மேலானது. என் உயிரின் வேர் தமிழ்தான்.
நேற்று பெய்த தொழில்நுட்ப மழையில் முளைத்த இணையத்தில், இன்று தளிர்த்த புது எழுத்தாளர்களில் நானும் ஒருவன். எழுத்து என் முழுநேரப் பணியல்ல. எனது சில ஆசைகளுக்கும், பல ஆற்றாமைகளுக்கும் வாய் முளைக்கும்போது, கட்டுரைகளாக மலர்கின்றன. அதில் அறமும் இருக்கும், அறச்சீற்றமும் இருக்கும்.
எனக்கு தமிழ்த்தாய் மட்டுமே. இந்தியத்தாய் வேண்டுமானால் செவிலித்தாயாக இருந்துவிட்டுப் போகட்டும். வாழ்க தமிழ். வளர்க தமிழ்.
View all posts by ராஜேஷ் லிங்கதுரை