உன் முதல் அழுகுரலில் ஆர்ப்பரித்தது நெஞ்சம் – ஆனால்
உணர்ச்சிகளுக்குத்தான் சற்று பஞ்சம்.
பாசத்திற்கு நான் பழையவன் – அதை
வெளிக்காட்டுவதில் கொஞ்சம் புதியவன்.
கொஞ்சும் மொழிகள் நான் அறிந்ததில்லை – ஆனால்
நெஞ்சம் உனை ஒருநொடி மறந்ததில்லை.
இறுக்கமான முகத்துக்குள் முறுக்கி வைத்த மீசையும் உண்டு – அதற்குள்
உருக்கமான உள்ளமும் உண்டு.
உள்ளத்தின் ஆழத்தில் அன்புக்கு எல்லையில்லை – ஏனோ
உதடுகள் உச்சரித்துப் பழகியதில்லை.
பிறந்து விட்டாய் நீ என்றதும் – ஒரு நொடி
மறந்து விட்டேன் இந்த உலகை.
அன்று பிறந்தது நீ மட்டுமல்ல – உன்னுடன்
உனக்கொரு தந்தையும் பிறந்திருக்கிறான்.
Like this:
Like Loading...
Related
Published by ராஜேஷ் லிங்கதுரை
ராஜேஷ் லிங்கதுரை என்னும் நான் பிறந்தது தூத்துக்குடிக்கு அருகில் இருக்கும் முள்ளக்காடு என்னும் கிராமம். கல்லூரியில் சேர்ந்த முதல் நாள், ஆசிரியர் உனக்கு எந்த ஊர் என்று கேட்டபோது, எனது ஊர் முள்ளக்காடு, எனது ஊருக்கு அருகிலேதான் தூத்துக்குடி இருக்கிறது என்று சொன்னேன். அவருக்கு நினைவிருக்கிறதோ இல்லையோ உடன்படித்த நண்பர்கள் அனைவரிடமும் எனது பெயர் முள்ளக்காடு என்று பதிவாகிப்போனது. எனது ஊரின் பெயர் என்னை விட்டுப் பிரிக்க முடியாதது.
பொறியாளர் பட்டம் பெற்று பின்பு வணிகவியல் மேலாண்மையும் படித்து, இரண்டுக்கும் தொடர்பில்லாத மென்பொருள் துறையில் வேலை. சாதி, மதம் போன்ற அடையாளங்கள், அரசாங்க அடையாள அட்டைகளுக்கு மட்டும்தான். வாழ்வில் சாதி, மதம் இரண்டையும் வெறுத்து ஒதுக்கி பல ஆண்டுகள் ஆகிறது. பகுத்தறிவாளன் என்ற சொல்லாடலைப் பயன்படுத்த விரும்பவில்லை. பகுத்தறிவு மனிதனாய்ப் பிறந்த எல்லோருக்கும் பொதுவானது. நான் கடவுள் மறுப்பாளன். பிறந்ததும் பிழைப்பதும் வேறுவேறு இடம் என்பது சங்ககாலத்தில் இருந்தே தமிழர்களுக்கு பழக்கமான ஒன்றுதான். தற்போதைய உறைவிடம் சென்னை என்றாலும் அதுவும் மாற்றத்துக்கு உட்பட்டதுதான்.
View all posts by ராஜேஷ் லிங்கதுரை