எனக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை என்று நீ எண்ணிக் குமுறும் வலிகள் அனைத்தும், நீ எண்ணுவதை விட பலமடங்காக பல கோடிபேருக்கு நிகழ்ந்து கொண்டிருக்கிறது இந்த பூமியில்.
எப்போதும் சிரித்த முகமாகத் தென்படும் உனது நண்பர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் அழுவதற்கு ஆயிரம் காரணங்கள் புதைந்து கிடக்கத்தான் செய்கிறது.
இதுவல்லவோ வாழ்க்கை என்று நீ வியந்து பார்க்கும் எல்லோருக்குமே, நாம் ஏன் வாழ்கிறோம் என்ற விரக்தி அவ்வப்போது எட்டிப் பார்க்காமல் இருந்ததில்லை.
இனி வாழவேண்டாமென்ற முடிவுக்கு உன்னைத் தள்ளிய நிகழ்வு, யாரோ ஒருவருக்கு அன்றாடம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
உன் முதுகுக்குப் பின்னால் பிதற்றும் கூட்டம் அதிகரிக்கிறதென்றால், நீ அந்தக் கூட்டத்தை விட முன்னேறிக் கொண்டிருக்கிறாய் என்று அர்த்தம்.
வலிகளும் வேதனைகளும் ஒரு கணம் காயப்படுத்தும், ஆனால் வாழ்நாள் முழுவதும் உன் மனதை பலப்படுத்தும்.
வாழ்க வளமுடன்.
Like this:
Like Loading...
Related
Published by ராஜேஷ் லிங்கதுரை
ராஜேஷ் லிங்கதுரை என்னும் நான் பிறந்தது தூத்துக்குடிக்கு அருகில் இருக்கும் முள்ளக்காடு என்னும் கிராமம். கல்லூரியில் சேர்ந்த முதல் நாள், ஆசிரியர் உனக்கு எந்த ஊர் என்று கேட்டபோது, எனது ஊர் முள்ளக்காடு, எனது ஊருக்கு அருகிலேதான் தூத்துக்குடி இருக்கிறது என்று சொன்னேன். அவருக்கு நினைவிருக்கிறதோ இல்லையோ உடன்படித்த நண்பர்கள் அனைவரிடமும் எனது பெயர் முள்ளக்காடு என்று பதிவாகிப்போனது. எனது ஊரின் பெயர் என்னை விட்டுப் பிரிக்க முடியாதது.
பொறியாளர் பட்டம் பெற்று பின்பு வணிகவியல் மேலாண்மையும் படித்து, இரண்டுக்கும் தொடர்பில்லாத மென்பொருள் துறையில் வேலை. சாதி, மதம் போன்ற அடையாளங்கள், அரசாங்க அடையாள அட்டைகளுக்கு மட்டும்தான். வாழ்வில் சாதி, மதம் இரண்டையும் வெறுத்து ஒதுக்கி பல ஆண்டுகள் ஆகிறது. பகுத்தறிவாளன் என்ற சொல்லாடலைப் பயன்படுத்த விரும்பவில்லை. பகுத்தறிவு மனிதனாய்ப் பிறந்த எல்லோருக்கும் பொதுவானது. நான் கடவுள் மறுப்பாளன். ஆனால், இல்லாத கடவுளும், இருக்கின்ற கோவில்களும் சமூகத்துக்குத் தேவைதானா என்றால், ஆம் என்பதே எனது பதில்.
சங்க இலக்கியங்களைப் பொருத்தவரை, நிலம், பொழுது ஆகிய இரண்டும் முதற்பொருள். ஆனால், என்னைப் பொருத்தவரை, முதற்பொருள் மொத்தம் மூன்று. நிலம், பொழுது, மொழி. மொழியென்ற ஒன்று இல்லையென்றால், நாமும் விலங்குகளும் ஒன்றுதான். நம்மை மனிதன் என்று உணர வைப்பது நம் தாய்மொழிதான். ஆகவே, தாய்மொழி தாயினும் மேலானது. என் உயிரின் வேர் தமிழ்தான்.
நேற்று பெய்த தொழில்நுட்ப மழையில் முளைத்த இணையத்தில், இன்று தளிர்த்த புது எழுத்தாளர்களில் நானும் ஒருவன். எழுத்து என் முழுநேரப் பணியல்ல. எனது சில ஆசைகளுக்கும், பல ஆற்றாமைகளுக்கும் வாய் முளைக்கும்போது, கட்டுரைகளாக மலர்கின்றன. அதில் அறமும் இருக்கும், அறச்சீற்றமும் இருக்கும்.
எனக்கு தமிழ்த்தாய் மட்டுமே. இந்தியத்தாய் வேண்டுமானால் செவிலித்தாயாக இருந்துவிட்டுப் போகட்டும். வாழ்க தமிழ். வளர்க தமிழ்.
View all posts by ராஜேஷ் லிங்கதுரை